செவ்வாய், 14 ஜூன், 2011

முழு சந்திரகிரகணம் ஜூன் 15, 2011

செவ்வாய் ( ஜூன் 15, 2011 ) இரவு ஓர் அரிய/அற்புத வான் நிகழ்வு நடக்க உள்ளது. சந்திரகிரகணம் நாளை இந்தியாவில் தெரிகிறது.

1. ஜூன் 15 2011 சந்திரகிரகணம் ஏன் ஓர் அரிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது?

பூமியின் நிழலில் நிலவு செல்லும்போது சந்திரகிரகணம் ஏற்படும் என்பது நாம் அறிந்த
தே. பூமியின் நிழல் வானில் ஒரு கூம்பு வடிவில் விழுகின்றது. அக்கூம்பின் விட்டம் பூமிக்கு அருகாமையில் அதிகமாக இருக்கும். எனவே நீள்வட்டப்பாதையில் செல்லும் நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் காலத்தில் பூமியின் நிழலை அதிக தூரம் கடக்கவேண்டியிருக்கும். கிரகணம் நடக்கும் அன்று ஓரளவு பூமியிலிருந்து அருகாமையில் நிலவு உள்ளது. மேலும் இன்று நிழலின் மேலோ கீழோ செல்லாமல் நடுப்பகுதியின் வழியே நிலவு செல்கிறது. நிமிடத்திற்கு 96கி.மீ வேகத்தில் செல்லும் நிலவு சுமார் 9630 தூரத்தை பூமியின் நிழலில் கடக்கவேண்டியுள்ளது. எனவே கிரகணம் 100 நிமிடங்கள் தெரியும். இவ்வாறு நீண்டநேரம் கிரகணம் தெரிவது ஓர் அறிய நிகழ்வே.
image.png

2. முழு சந்திரகிரகணத்தின் போது நிலவை நாம் பார்க்கமுடியுமா?

நம் பூமியின் நிழல் உண்மையில் கருமை நிறம் கிடையாது. பூமியின் வளிமண்டலம் சூரியனின் கதிர்களை ஒளிமுறிவு அடையச்செய்வதால் பூமியின் நிழல் செம்பழுப்பு நிறமாக இருக்கின்றது. எனவே முழு சந்திரகிரகணத்தின் போது நிலவு செம்பழுப்பு நிறத்தில் ( copper red) இருக்கும்.
ஆகையால் நாம் நிலவை கிரகணத்தின் போது காணமுடியும்.






3. ஜூன் 15 சந்திரகிரணதில் ஏதேனும் அற்புதம் உள்ளதா?

ஆம். முந்திய பதிலில் கூறியவாறு பூமியின் நிழல்கூம்பு செம்பழுப்பு நிறமாக இருந்தாலும் அதன் விளிம்பைவிட மையப்பகுதிகளில் கருமை அதிகமாக இருக்கும். இம்முறை நிலவு இம்மையப் பகுதிவழியாக செல்வதால் கிரகணத்தின் நடுசமயத்தில் (ஜூன் 16 காலை 1.42மணிக்கு) வெளிச்சம் மிகக்குறைவானதாகவே இருக்கும். மேலும் கடந்த ஆண்டு ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து வளிமண்டலத்தில் தூசு அதிகரித்து இருப்பதன் காரணமாக பூமிநிழலின் கருமையும் சற்று அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. எனவே இம்முறை கிரகணத்தின் நடுசமயத்தில் நிலவு முழுவதும் மறைந்துவிட வாய்புள்ளதாக வானவியலாளர்கள் கருதுகின்றனர்.

4. முழுசந்திரகிரகணத்தைப் பார்த்தால் தீங்கு ஏதேனும் ஏற்படுமா?

ஒவ்வொரு இரவிலும் நாம் பூமியின் நிழலில்தான் வசிக்கின்றோம். நம்மைப் போன்றே இன்று நிலவும் பூமியின் நிழலில் ஒதுங்குகின்றது. இது இயற்கையின் ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக அறிவியல் பூர்வ ஆதாரம் ஏதும் கிடையாது. தற்போது நிகழும் இவ்வழகிய வான்நிகழ்வு நம் நாட்டிலும் மற்றும் சில ஆசிய நாடுகளில் மட்டுமே நன்கு காணலாம். எனவே நாம் நம் சுற்றத்துடன் கண்டிப்பாக இந்த கிரகணத்தை கண்டு மகிழவேண்டும்.

5. நாம் சந்திரகிரகணத்தின் போது உண்ணலாமா?

நாம் தினந்தோறும் இரவு உணவை பூமியின் நிழலிலேயே உண்கின்றோம். இதனால் உணவு எதுவும் கெட்டுப்போவதில்லை; நம் ஜீரணசக்தியில் மாற்றம் ஏற்படுவ்தும் இல்லை. மற்ற பௌர்ணமி நாட்களில் நிலாசோறு உண்டுமகிழ்வது போல் இன்றும் உண்ணலாம்.

6. எந்த நேரத்தில் நாம் இந்நிகழ்வைக் காணலாம்?

இந்தியாவில் கிரகணம் ஜூன் 15ம்தேதி இரவு ஆரம்பித்து ஜூன் 16ம்தேதி அதிகாலை முடிகின்றது. கிரகணம் ஏற்படும் பல்வேறு கட்டங்களின் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15ம் தேதி
1. அரி நிழலில் (penumbra) நிலவு நுழைதல் : இரவு 10.52:52
2. கருநிழலில் (Umbra) நிலவு நுழைதல் : இரவு 11:52:24

ஜூன் 16ம்தேதி
3. முழுகிரகணம் ஆரம்பித்தல் : 00:51:57
4. கிரகணத்தின் நடுப் பகுதி : 1:42:24
5. முழுகிரகணம் முடிதல்: 2:32:50
6. கருநிழலிலிருந்து நிலவு வெளிவருதல் : 03:32:22
7. அரிநிழலிருந்து நிலவு வெளிவருதல் : 04:32:02

image.png

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக