வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மாநில ஐசான் பயிற்சிப்பட்டறைக்கு பங்குகொள்வதற்கான படிவம் ( State Level Workshop - EyesonISON campaign)


 தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி ஐசான் என்ற வால்நட்சத்திரம் சூரியனுக்கு அருகில் வருகின்றது. இந்நிகழ்வின்மூலம் அகிலைந்திய அளவில் மக்களிடைய அறியவியல் விழிப்புணர்வை பரப்புவதற்கு EyesonISON என்ற பிரச்சார இயக்கம் Vigyan Prasar மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AISPN) போன்றவை இணைந்து துவங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கின்றது.இதற்கான மாநில பயிற்சிப்பட்டறை செப்.23&24 தேதிகளில் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள், கட்டாயமாக தன்னார்வ கருத்தாளர்களாக தங்கள் மாவட்டத்தில் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுள்ள மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படவேண்டும்.
இது ஓர் உறைவிடப் பயிற்சிப் பட்டறையாதலால் தங்குவதற்கு அப்பள்ளியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (dormitory type accomodation ).
பயணச்செலவை பயிற்சிக்கு வருபவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டியது இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் செப்21ம் தேதிக்கு பிற்பகல் 2மணிக்கு முன்னதாக கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்.22ம் தேதி (ஞாயிறு) அன்று அவர்களுக்கு மின் அஞ்சலுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

Click the following link for the  form

திங்கள், 16 செப்டம்பர், 2013

ஐசான் வால்நட்சத்திரப் பிரச்சாரம் - குறிப்பு



மிழ்நாடு அறிவியல் இயக்கம் 

 ஐசான் வால்நட்சத்திரப் பிரச்சாரம் 


(சுறுக்கமான கருத்துக் குறிப்பு ) 
வானவியல் என்பது அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது. இதற்குக் காரணம் வானம் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆராய்ச்சிக் கூடமாக விளங்குவதேயாகும். எனவேதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் இரவில் வானத்தை நோக்குவது என்பது மனிதன் தோன்றிய கலத்தில் இருந்து பிடித்தமான செயலாக இருந்து வருகிறது. இதுவே வானவியல் அறிவியல்களின் தாயாக அமையக் காரணமாகவும் விளங்கியது.
குழந்தைகள் மட்டும் அல்லாது அனைவருமே அறிவியலைப் படிப்பதை விட நேரடியாகச் செய்து பார்ப்பதின் மூலம் எளிதில் கற்றுக் கொள்கிறோம். மேலும் ஆர்வமும் அதிகமாகிறது. அறிவியல் ஆர்வத்தை மக்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் Vigyan Prasar மற்றும் NCSTC-network ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற நம்நாடு முழுவதும் உள்ள பல தன்னார்வ அறிவியல் இயக்கங்களுடன் சேர்ந்து பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த சர்வதேச வனவியல் ஆண்டு – 2009, வளைய சூரியகிரகணம் -2010, வெள்ளி இடைநகர்தல் – 2012 (Transition of Venus) போன்றவற்றை மக்களிடத்தில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதை உதாரணமாகக் கூறலாம்.
தற்போது சூரியனை நெருங்கிவரும் ஐசான் (C/2012 ISON) என்ற வால்நட்சத்திரம் அறிவியலை மக்களிடத்தே பரப்புவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வால்நட்சத்திரம் நவம்பர் முதல் இரண்டாம் வாரத்திலிருந்து தெரிய ஆரம்பிக்கிறது. நவம்பர் 28ம் தேதி சூரியனுக்கு வெகுஅருகில் சென்று பின் டிசம்பர் முதல் மீண்டும் தெரியும். இந்த நூற்றாண்டின் மிக பிரகாசமன வால் நட்சத்திரமாய் அமையலாம் எனக் கருதப்படுகின்றது.
இந்த வான் நிகழ்வினை அனைத்து பள்ளிக் குழந்தைகளும் குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு வானவியலின் ஆர்வத்தை ஏற்படுத்துவற்கான ஓர் வாய்ப்பாகக் கருதலாம்.
இந்நிகழ்வினை நாடுமுழுவதும் மக்களிடம் கொண்டு செல்ல Vigyan Prasar, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AIPSN) மற்றும் IIAP, IUCAA, NRCA போன்ற வான் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து Eyes on Ison என்ற பிராச்சார இயக்கத்தை மேற்கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கின்றது. இதற்காக வால்மீன்கள் பற்றிய பல விளக்கப்படங்கள், சுவரொட்டிகள், கையேடு, நழுவுப்படக்காட்சிகள், வீடியோ, துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தயாரித்து வருகின்றது. இந்தக் கருத்து மூலங்களை யார் வேண்டுமானாலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்து வருகின்றது.
ஐசான் வால்நட்சத்திர பிரத்திரத்தினை தமிழகத்தில் கொண்டுசெல்லவதற்கு பொழுதுபோக்கு வானவியலாளர் குழுக்கள் (amateur astronomy clubs) , கல்வி நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், வானவியல் ஆர்வலர்கள் என பலதரப்பினரையும் இணைத்து ஒரு மேடையை அமைத்துள்ளது. இவர்கள் மாநில/மாவட்ட அளவிளான ஐசான் வால்நட்சத்திரத்திற்கான பயிற்சிப்பட்டறையில் (workshop on comet ISON) பங்குகொண்டு தங்கள் பகுதி மக்களுக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக இந்நிகழ்வினை எடுத்துரைப்பர்.
எனவே நீங்களும் இதில் இணைந்து, அனைவருமாக நம் மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்துவோமாக.



செவ்வாய், 24 ஜூலை, 2012

ஹிக்ஸ் போஸான்: பிரபஞ்சத்தில் நிறைக்குக் காரணமாகக் கருதப்பட்ட துகளைக் கண்டுபிடிக்கும் பிரமாண்ட ஆராய்ச்சியில் வெற்றி!



ஹிக்ஸ் போஸான்: பிரபஞ்சத்தில் நிறைக்குக் காரணமாகக் கருதப்பட்ட துகளைக் கண்டுபிடிக்கும் பிரமாண்ட ஆராய்ச்சியில் வெற்றி!
            கடந்தமாதம் ஜுலை 4ம் தேதி செர்ன் ஆராய்ச்சிக் கூடத்தின் ஒரு முக்கிய அறிவிப்பை அறிந்துகொள்ள            உலகமே மிகுந்த ஆவலுடன் காத்திருந்தது.  அன்று அவ்வாரய்ச்சிக்கூடத்தின் தலைமை விஞ்ஞானிகள் “ஹிக்ஸ் போஸான்” எனப்படும் அடிப்படை அணுத்துகளைப் போன்ற ஒன்றை கண்டுபிடித்துவிட்டதாகவும் அது “ஹிக்ஸ் போஸான்” தானா என்பதை அடுத்தகட்ட சோதனைகள் மூலம் உறுதிபடுத்தப்படும் என அறிவித்தனர்.
            மனித வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்டமான ஆராய்ச்சி செய்து இத்துகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் இதுபற்றிய மேலும் சில தகவல்களையும் நாம் இக்கட்டுரையில் காணலாம்.
            ஒரு பொருளுக்கு எடை எதைப் பொறுத்தது என்று கேட்டால், அது அப்பொருளின் நிறையையும் அதன்மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையையும் பொறுத்தது  என ஒரு  உயர்நிலைமாணவரால் கூட கூறமுடியும். சரி..அப்பொருளுக்கு நிறை எங்கிருந்து வந்தது என்றால் அதற்கு அணுவின் உட்கருவில் இருக்கும் புரோட்டான் மற்றும் நியூட்ரான்களே காரணம் என ஒரு மேல்நிலைமாணவர் எளிதில் காரணம் கூறுவார். அப்படியானால், புரோட்டானுக்கும் நியூட்ராணுக்கும் நிறை எங்கிருந்து வந்தது என்றால் புரோட்டான் மற்றும் நியுட்ரானின் உள்ளே இருக்கும் ’குவார்குகள்’ எனப்படும் அடிப்படைஅணுதுகள்களினால் (elementary atomic particles) என கல்லூரி மாணவர் எடுத்துரைப்பார்.  உடனே அடுத்த கேள்வியான குவார்குகளுக்கு  நிறை எப்படி வந்தது ? என்பதற்கு பதிலை அறியும் முன்னர் அணுவினைப் பற்றிய தற்கால விளக்கங்களை சுருக்கமாக நாம் அறிந்துகொள்ளலாம்.
            1950 களில் துகள் வேக முடுக்கி (particle accelerator) தொழில்நுட்பம் வளர்சி அடைய ஆரம்பித்தன் விளைவாக அணுத்துகளான நியூட்ரான் புரோட்டான் போன்றவை சில அடிப்படை துகள்களால் ஆனவை என கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துகள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு அணுவின் “திட்ட மாதிரி” (Standard model of atom) கொள்கை தயாரிக்கபட்டது. இதன் முக்கிய நோக்கம் அடிப்படைத்துகள்களுக்கும் அடிப்படை விசைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே ஆகும். இந்த திட்டமாதிரியின்படி அடிப்படைத்துகள்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அணுவிற்கு நிறையைக் கொடுக்கும் துகள்களான பெர்மியான்கள் மற்றொன்று அடிப்படை விசைக்குக் காரணமான போஸான்கள். 
            பெர்மியான்கள் 6 க்குவார்குகள் மற்றும் 6 லெப்டான்களால் ஆனவை.  லெப்டான்கள் க்குவார்குகளைவிட எடை குறைந்தவை எனவேதான் அவை ‘மெல்லியவை’ என்னும் பொருள்பட லெப்டான்கள் என அழைக்கப்படுகின்றன.


            போஸான்கள் என்றால் போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியலுக்குக் கட்டுப்படும் துகள்கள் என்பதாகும். உதாரணத்திற்கு ஒளித்துகளான ஃபோட்டான், க்ளூஆன், W , Z and H போஸான் போன்றவை ஆகும். முக்கிய அடிப்படை விசைகளுக்குக் (fundamental forces) காரணமான இந்த போஸான்கள் விசை தாங்கிகள் என அழைக்கப்படுகின்றன. ஒளித்துகள் மின்காந்த புலத்திற்கும், குளூஆன்கள் வலிமையான உட்கரு விசைக்கும் , W & Z நலிந்த உட்கரு விசைக்கும் காரணமாகும்.
            உண்மையில் புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகியவை அடிப்படை அணுத்துகள்கள் கிடையாது. அவை மேலே குறிபிடப்பட்ட சிலஅடிப்படைத்துகள் சேர்வதினால் கிடைக்கும் கூட்டுப் பொருளே (composite) ஆகும். உதாரணமாக இரண்டு மேல் (up) மற்றும் ஒரு கீழ் (down) க்குவார்குகள் சேர்த்ததுதான் ஒரு புரோட்டான்.
            இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். மேற்குவங்கத்தைச் சார்ந்த சத்யேந்திரநாத் போஸ் 1924 ஆம் ஆண்டு, இரு ஒளித்துகள்களை வேறுபடுத்த இயலாது என்பதை விளக்கும் கட்டுரையை மற்ற அறிவியல் வெளியீட்டார்கள் ஏற்றுக்கொள்ளாததால் போஸ் அதனை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பிவைத்தார். ஐன்ஸ்டீனும் அதை ஏற்றுக்கொண்டு அதனை மொழியாக்கம் செது ஒரு ஜெர்மனிய ஆய்வு பதிப்பகத்தின் மூலம் வெளியிடச் செய்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு , ஒரே ஆற்றலை பெற்று,   ஒன்றை ஒன்று வேறுபடுத்தமுடியாத ஒரே மாதிரியன துகள்களுக்கு போஸான்கள் என்ற பெயரை பால் டைராக்(Paul Dirac) என்ற  தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானி பெயர் சூட்டினார்.
            மீண்டும் நாம் நமது முக்கிய கேள்விக்கு வருவோம். அதாவது அடிப்படைத் துகள்களுக்கு நிறை எப்படி கிடைக்கின்றது? இதை விளக்குவதற்கு 1964 ஆம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்பவர் ஒரு தத்துவத்தைக் கூறினார். இதன்படி அணுவினுள் உள்ள இடைவெளி உட்பட பிரபஞ்சம் முழுவதும் ”ஹிக்ஸ் புலம்” ( Higgs Field) நிறைந்துள்ளது.  அடிப்படைத்துகள் அதன் ஊடாகச் செல்லும் போது , அத்துகளுக்கு நிறை ஏற்படுகின்றது. துகள்கள் எந்த அளவிற்கு ஹிக்ஸ் புலத்துடன் செயல்புரிகின்றதோ அந்த அளவிற்கு  அதற்கு நிறை கிடைக்கும். ஹிக்ஸ் புலம் இல்லை என்றால் அடிப்படை அணுத்துகள்கள் கட்டுப்பாடின்றி ஒளியின் வேகத்தில் சுதந்திரமாகச் செல்லும்.  எனவே அவை ஒன்றோடொன்று சேர்ந்து பருப்பொருள் (matter) என்பது பிரபஞ்சத்தில் உருவாகியிருக்க இயலாது என்பதே அவருடைய விளக்கம்.  பெருவெடிப்பு (Big bang) நடந்த சில வினாடிநேரங்களில் அணுவின் அடிப்படைத்துகள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்பட்டு நிறையைப்பெற்று புரோட்டான் நியூட்ரான்கள் தோன்றி இறுதியில் அணுக்கள் தோன்றின. இவ்வாறு பிரபஞ்சத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அனைத்தையும் விளக்குவதற்கு ஹிக்ஸ் போஸான் தேவைப்படுகின்றது.
            திட்ட மாதிரியின் படி 6 லெப்டான்களுக்கு ’தனக்கான நிறை’ என்பதுகிடையாது. இருப்பினும் மின்சுமையுடைய எலெக்ரான், ம்யூயான், டௌ  போன்ற லெப்டான்கள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்படுவதால் அதற்குத்தகுந்தவாறு நிறையுண்டு.  ஆனால் மின்சுமையற்ற   3 வகை நியூட்ரினோக்கள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்புரியாததால் அவற்றிற்கு நிறை கிடையாது.
            இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். பருமன் குறைந்தவரை விட பருமன் அதிகமானவர் நீந்தும்போது நீருடன் அதிகமாக செயல்படவேண்டியிருப்பதால் அதிக நிறையை உணர்வார். இதேப் போன்றுதான் அடிப்படைத்துகள் ஹிக்ஸ் புலத்துடன் செயல்படுவதற்குத் தகுந்தவாறு நிறையைப் பெறுகின்றன.
            இத்துகள்களைப்பற்றிய லெடர்மேன் என்ற நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியின் புத்தகத்தினை ’கடவுள் துகள்” ( The God’s Particle) என விளம்பரத்திற்காக பதிப்பகத்தார் வெளியிட, விஞ்ஞானிகள் விரும்பாவிட்டாலும் இந்த பெயர் பொது மக்களிடையே பிரபலமாயிற்று.



            மின்காந்தபுலத்திற்குஅடிப்படைத் துகளாக ஒளித்துகள் இருப்பது போன்று ஹிக்ஸ் புலத்திற்கு ஹிக்ஸ் போஸான் உள்ளது.  இதை உறுதி செய்யவே பிரமாண்டமான ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இதற்காக  சுவிட்சர்லாந்து-பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அரைகிலோமீட்டர்  பூமிக்கு அடியில் 27 கி.மீ தூரத்திற்கு வட்டமான துகள் முடிக்கியை அமைத்து ஹேட்ரான் வகையில் ஒன்றாகிய புரோட்டான்களை அசூர வேகத்தில் மோதவிடுவார்கள். அவ்வாறு செய்யும்போது அவை அடிப்படை அணுத் துகள்களாக மாறும். அதாவது பிரபஞ்சம் தோன்றத்தின் ஆரம்பத்தில் பெருவெடிப்பு (Big bang) நிகழ்ந்தபோது எப்படி அணுக்கள் உருவாவதற்கு முந்தைய சூழல் நிழவியதோ அதே சூழலை உருவாக்கி ஹிக்ஸ் துகள்களைக் கண்டறிவதே இவ்வாரய்ச்சியின் நோக்கம் ஆகும். இதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டதால்       “ திட்ட மாதிரி” யின் தத்துவங்களும் வெற்றி பெறுகின்றது இல்லையேல் நாம் மீண்டும் ஒரு புதிய அணு மாதிரியை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவேண்டியிருக்கும்!

இந்த ஆராய்சியைப் பற்றிய சில புள்ளி விவரங்கள்:
  • LHC (Large Hadron collider) எனப்படும் அணுவைப் பொடிப்பொடியாக்கும் ஆராய்சிக்கு ஆகும் செலவு 10பில்லியன் டாலர்.
  • LHC தான் உலகின் மிகப்பெரிய இயந்திரம்.
  • சூரியனின் மையத்தைவிட ஒரு லட்சம் மடங்கு வெப்பம் அதிகமாக உருவாகுவதும், பெருவெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சத்தில் குறைவான வெப்பநிலை -271.3°C (1.9 K) உருவாகுவதும் இங்குதான்.
  • 1015 புரோட்டான் - புரோட்டான் மோதல்கள் ATLAS & CMS உணர்வி மூலம் பகுத்து ஆய்வுசெய்யபட்டுள்ளது.
  • இந்த உணர்விகளில் இருந்து ஒரு செகண்டில் கிடைக்கும் தரவுகளை பதியும் குறுந்தகடுகளை (CD) 450 அடி உயரத்திற்கு அடுக்கலாம்.
  • 5175 விஞ்ஞானிகள், 1535 மாணவர்கள், 250 Ph.D பட்டம் பெற்ற பெண் விஞ்ஞானிகள் பங்குபெற்ற ஆராய்ச்சியாகும்.
 
 
நன்றி: விஞ்ஞான சிறகு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்           


சனி, 2 ஜூன், 2012

தமிழ்நாட்டில் வெள்ளி இடைநகர்வு 2012 ஜூன் 6

Please install latest Flash Player to run SunAeon Venus Transit 2012

வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
வெள்ளி இடைநகர்வு 2012 - ஓர் அபூர்வ வான் நிகழ்வு
நம்வாழ்வின் கடைசி வாய்ப்பு
நாம் அனைவரும் இவ்வருடம் ஜூன் 6ம் தேதி வெள்ளி இடைநகர்வு எனும் ஓர் அபூர்வ வான்நிகழ்வைக் காண இருக்கிறோம். வெள்ளிக் கோளானது சூரிய தட்டின் வழியே ஒரு புள்ளி போன்று நகர்ந்து செல்வதையே வெள்ளி இடைநகர்தல் (Transit of Venus) என்கிறோம்.
            2004ம் ஆண்டு ‘வெள்ளி இடைநகர்வு” உலகம் முழுவதிலும் பொதுமக்கள் பலரால் பார்கப்பட்டது. 121 வருடங்கள் கழித்து நடந்த இந்நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் மக்களையும் காணச்செய்தது. இதன்பிறகு டிசம்பர் 2117ல்தான் நிகழும். எனவே தற்போதுள்ள தலைமுறையினர் யாரும் ஜூன் 6 நிகழ்விற்குப்பின் இதைக் காணமுடியாது. எனவேதான் இது ஓர் அரிய நிகழ்வாகிறது..
இந்நிகழ்வில் அப்படியென்ன முக்கியத்துவம் உள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.. இந்நிகழ்வின் மூலமே நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு எவ்வளவு என கணக்கிடப்பட்டது.
எப்போது காணலாம்?
                        இந்த நிகழ்வு ஐந்துகட்டங்களாக நடைபெறுகின்றது.
1.     வெள்ளி  நுழையும்முன் சூரியதட்டினை வெளிப்புறமாக தொடுதல்
2.     வெள்ளி முழுவதுமாக சூரியதட்டினுள் சென்றுவிடுதல்
3.     வெள்ளி நகர்வின் மையப்பகுதி
4.     வெள்ளி வெளியேறும் முன் சூரியதட்டின் உட்புறத்தைத் தொடுதல்
5.     முழுவதுமாக வெளியேறிவிடுதல்.
சென்னையில் இந்த ஐந்து கட்டங்கள் தெரியும் நேரங்களைக் கீழே காணவும்.


தமிழ்நாட்டின் தெற்கே செல்லச் செல்ல அதிகபட்சமாக 15 வினடிகள் வரை இந்நேரங்கள் தாமதமாகலாம். முதல் இரண்டுநிகழ்வுகளும் தமிழ்நாட்டில் சூரியோதயத்திற்குமுன் நடப்பதால் நம்மால் காண இயலாது. சூரியன் உதித்ததிலிருந்து (காலை 5.41 மணி முதல்) கடைசி  நிகழ்வுவரை நம்மால் காண இயலும்.

வெள்ளி இடைநகர்வு தெரிந்த / தெரியும்  வருடங்கள்
ஜுன்

1761
1769

2004
2012

2247
2255
டிசம்பர்
1631
1639

1874
1882

2117
2125


இந்நிகழ்வை எவ்வாறு காண்பது?
இந்நிகழ்வினைப் பார்க்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்.
1.     சூரியகண்ணாடிகள் அல்லது வெல்டிங்கிலாஸ் மூலம் தொடர்து பார்க்காமல் சில வினாடிகள் மட்டும் பார்த்தல்,,
2.     சிறிய கையடக்கக் கண்ணாடி( எந்த வடிவமானாலும் சரி) மூலம் சூரிய பிம்பத்தை வட்டமாக தெரியுமாறு இருட்டறையின் சுவற்றில் வீழ்த்திப் பார்த்தல், செய்முறையை கீழே காணவும். 
3.     தொலைநோக்கி மூலம் பிம்பத்தை திரையில் வீழ்த்திப் பார்த்தல்.
எச்சரிக்கை! ஒருபோதும் சூரியனை நேரடியாகக் காணாதீர்! ஏனெனில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் நம் கண்ணிலுள்ள லென்சுகளால் குவிக்கப்பட்டு விழித்திரை நிரந்தமாக பாதிக்கப்படும். எனவே பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

செய்முறை
தேவையான பொருட்கள்: சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, சுமார் 1செ.மீ விட்டம்   துளையிட்ட அட்டை
1.     சிறிய கண்ணாடி (Pocket mirror) மூலம் சூரிய வெளிச்சத்தை இருட்டறையில் புள்ளிகளற்ற சமதளமான வெள்ளை சுவற்றிலோ அல்லது காகிதத்திலோ விழச்செய்யவும்.
2.     கண்ணாடியின் முன்பாக சுமார் ½ மீட்டர் தூரத்தில், துளையிட்ட அட்டையை கண்ணாடிக்கு செங்குத்தாக பிடிக்கவும்.அல்லது அதை இடைவெளி இல்லாது கண்ணாடியில் ஒட்டிவிடவும்.
3.     இப்போது சூரியனின் பிம்பத்தை இருட்டறையில் காணலாம். மேலும் அதில் சூரியபுள்ளிகளையும், வெள்ளி கோள் கடந்து செல்வதையும் காணலாம்.
4.     சூரிய பிம்பத்தின் விட்டம் 12-15 செ.மீ இருப்பதால் கரும்புள்ளியாகத் தெரியும் வெள்ளியின் விட்டம் 3.5 – 4.5 மி.மீ இருக்கும்.
குறிப்பு:
1.     15 செ.மீ விட்டம் உள்ள பிம்பம் தெரிய வேண்டுமானால் 15மீ (50 அடி) தூரத்திலிருந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யவேண்டும். அதாவது X செ.மீ விட்டம் உள்ள பிம்பம் வேண்டுமெனில் X தூரத்திலிருந்து கண்ணாடியை பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
2.     விட்டம் பெரியதாக ஆக, பிம்பத்தின் வெளிச்சம் குறைந்து கொண்டே வரும்.
3.     பிம்பத்தினை ஒரு வரைபடத்தாளில் (graph Sheet) விழச்செய்து, சூரியன் மற்றும் வெள்ளியின் பிம்பங்களை ஒரே நேரத்தில் வரைந்தால், வெள்ளியைவிட சூரியனின் பிம்பம் எத்தனை மடங்கு பெரியதாக இருக்கிறது எனக் கணக்கிடலாம்.

பாதுகாப்பான முறையில் இந்த அரியநிகழ்வை தாங்கள் ஜூன் 6 அன்று காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாழ்த்துக்கள்!